Pages

Saturday 27 October 2012

விஜயகாந்தை சேலம் மாவட்டப் பத்திரிகையாளர்கள் கண்டிக்கிறோம்!




பத்திரிகையாளர்கள்: மேலும் இரண்டு தே.மு.தி.க
எம் எல் ஏக்கள் ஜெயலலிதாவை சந்திச்சிருக்காங்களே?
’’
விஜயகாந்த்: போடா..போடா நாயே..எங்கிட்ட கேள்வி கேட்கத்தான் உனக்கு உன் பத்திரிகைல சம்பளம் தராங்களா? இல்ல உன் பத்திரிகையாடா எனக்கு சம்பளம் தருது நாயி....? ஜெயலலிதாகிட்ட போயி இந்த கேள்வியெல்லாம் கேளு....’’


மேலே குறிப்பிடப்பட்டுள்ள அநாகரீகமான வசவு இன்று சென்னையில் தன்னைக் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரிடத்தில் அரசியல் நடிகர் விஜயகாந்தால் அள்ளி விடப்பட்டு இருக்கிறது.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில்  ஆண்டி என்பதைப் போல அண்மைக்காலமாகப் பத்திரிக்கையாளர்கள் என்றால் அரசியல்வாதிகள் அனைவருக்குமே இளப்பம் ஆகி வருகிறது. நேர்காணலின்போது பத்திரிகையாளர்கள் சந்திக்கும் அவமானங்கள் தொடர்கதை ஆகி வருகிறது......

தேர்தல் நேரத்தில் "அண்ணே! செய்தியப் போட்டு எங்களை மக்களிடம் ப்ரொமோட் பண்ணுங்க...." என்று கெஞ்சும் இதே அரசியல் வியாதிகளுக்கு தேர்தலில் வெற்றி கிடைத்த மாத்திரத்தில் தானாகக் கொம்புகள் முளைத்து விடுகின்றன. ஏற்றி விட்ட ஏணியை நன்றி மறந்தவர்களாக எட்டி உதைக்கும் அளவுக்கு இவர்களின் மனம் அதிகாரம் அல்லது புகழ் போதையினால் மரத்துப் பொய் விடுகிறது.  அதற்கு விஜயகாந்தும் விதிவிலக்கல்ல....

அண்மைக்காலமாக நிதானமிழந்தவராக அனைவரிடமும் பேசித் திரியும்  அரசியல் நடிகர் விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் தற்போது தன்னுடைய சுயரூபத்தினை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்.  பத்திரிகையாளர் அவமானப்படுதப்பட்டதோடல்லாமல்  அவர் முன்னிலையில் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கின்றனர்.  அவரை சேலம் மாவட்டப்  பத்திரிக்கையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பத்திரிகையாளர்களைப் பகைத்து எந்த அரசியல்வாதியும் உயர்ந்தார் என்ற வரலாறு இல்லை என்பதை உணர்ந்து இனியாவது தன்னை அவர் திருத்திக் கொள்ள வேண்டும். இது இப்படியே தொடர்ந்தால்  அடுத்த தேர்தலில் அவர் செல்லாக்காசு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

விஜயகாந்துக்கு சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர் மீது உரிய நடவடிக்கையை உடன் எடுக்கும்படி தமிழக அரசை சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

******************************************************************************

சென்னை விமான நிலையத்தில் மூத்த பத்திரிகையாளர் மீது தாக்குதல் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

இன்று (27-10-2012) சனிக்கிழமை காலை மதுரை செல்ல தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் விமான நிலையம் வந்திருந்தார் தே மு தி க தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான திரு . விஜயகாந்த் . தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தொடர்ந்து தமிழக முதல்வரை சந்தித்துள்ள அர சியல் சூழலில் திரு.விஜயகாந்திடம் கேள்விகளை கேட்க பத்திரிகையாளர்கள் முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற விஜயகாந்த் தன்னிலை மறந்து பத்திரிகையாளர்களை கடுமையாக தரக்குறைவாகவும் அச்சுறுத்தியும் பேசியுள்ளார். விஜயகாந்துடன் வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் திரு. முருகேசன் மூத்த பத்திரிகையாளர் பாலு வை தாக்கியுள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்த திரு. பாலு, நடந்த சம்பவம் குறித்து மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பத்திரிகையாளர்களை தரக்குறைவாகவும் அச்சுறுத்தியும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பொறுப்பில் உள்ள விஜயகாந்த் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது ....

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்திற்கும் விடப்படும் சவாலாகவே சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கருதுகிறது. நடந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் , திரு.விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் காவல் துறையினராலும். சமுக விரோதிகளாலும் , அரசியல்வாதிகளாலும் , சமீபத்தில் சென்னை ஐ ஐ டி பேராசிரியராலும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கின்றது. பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட தமிழக அரசு உறுதி செய்வதுடன் , இன்று நடைபெற்ற சம்பவத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

பாரதிதமிழன்
இணை செயலாளர்

Friday 12 October 2012

எச்சரிக்கைகள் எங்களுக்கில்லை!


எச்சரிக்கை அறிவிப்புகளை மீறுவதில்தான் என்ன ஒரு ஆனந்தம்!





























Monday 1 October 2012

இவங்க கூத்து தாங்கல....

சேலத்தில் இதுவரையில் ஆட்சியர்களாக இருந்த  அனைவரையும் விட தற்போது  அந்தப் பொறுப்பில் இருக்கும் மகரபூஷணம் செய்தியாளர்களிடத்தில் விரோதப் போக்கினைக் கடைப்பிடித்து வருகிறார்.


செய்தியாளர்களை ஏவலர்களைப் போல தரக் குறைவாக நடத்துவது, செய்தியாளர்கள் நிஜத்தைத் தவிர்த்துத தன்னுடைய கருத்தை மட்டுமே செய்தியாக்கி வெளியிட வேண்டுமென நினைப்பது போன்ற எதேச்சதிகார மனப்பான்மையுடன் நடந்து கொண்ட ஒரே ஆட்சியர் இவராகத்தான் இருக்க முடியும்.

ஆட்சியரின் இந்த செயல்கள்  அனைத்துக்கும் பின்னணியில் இருந்து அவரை இயக்கி வருபவர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக இருக்கும் பழனிசாமி என்பதுதான் வேதனை!


ஆட்சியருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையில் நல்லுறவுப் பாலமாக இருந்து அரசின் சாதனைகளை மக்களிடம் செய்தி ஊடகங்கள் வழியே கொண்டு சேர்க்கும் பொறுப்பு தன்னுடையது என்பதை மறந்தவராக தன்னை ஒரு குறுநில மன்னராக நினைத்துக் கொண்டு செய்தியாளர்களை விரோதித்துக் கொண்டு அவர்களிடம் "நீயா? நானா? பார்த்துக்கலாமா!?" என்று முஷ்டியை மடக்கிக் காட்டும் ரேஞ்சுக்கு இவரது நடவடிக்கைகள் உள்ளன.

மேற்கூறப்பட்ட இரு அதிகாரிகளுமே சேலத்துக்கு ஏறக்குறைய சமகாலத்தில் இடமாறுதலில் வந்தவர்கள். முதலில் ஆட்சியர் வந்தார் அடுத்ததாக பி.ஆர்.ஓ . வந்தார். ஏனோ தெரியவில்லை இந்த இரு அதிகாரிகளுக்குமே சேலம் செய்தியாளர்கள் ஆரம்ப முதலே இளப்பமாகவே தெரிந்தனர். தங்களது ஆணைக்கிணங்க செய்திகளை வெளியிடும் அடிமைகளாகவே  செய்தியாளர்களை அவர்கள் பார்த்தனர்.


ஆட்சியர் பங்கேற்கும் விவசாயிகள் குறை தீர்நாள் போன்ற நிகழ்ச்சிகளில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வலுக்கட்டாயமாக  அவர்கள் வெளியேற்றப் பட்டனர்.

சேலம் செய்தியாளர்களிடையே துரதிர்ஷ்டவசமாக ஒற்றுமையின்மை இருப்பதைப் பயன்படுத்தி இந்த இருவருமே அதில் குளிர்காயப் பார்த்தனர். ஆனால் இது தெரிய வந்த மாத்திரத்தில் உஷாரான சேலம் செய்தியாளர்கள் பொதுவான சங்கதிகளில் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற மனோபாவத்தில் அமைப்பு வேறுபாடுகளைக் கடந்தவர்களாய் தற்போது ஒற்றுமையுடன் செயல்படத் தொடங்கியுள்ள காரணத்தால் ஆண்டு அனுபவிக்கப் பார்த்த அதிகாரிகளின் சாயம் தற்போது வெளுக்கத் தொடங்கி  உள்ளது.


சேலத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்ட சமயத்தில் அதன் முதல் தளத்தில் செய்தியாளர்களுக்கான அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு வரைபடத்திலும் அது குறிக்கப்பட்டு இருந்தது. அப்போது பி.ஆர்.ஓ.வாக  இருந்த மனோகரனின் முயற்சியால் இது நடந்தது. கட்டுமானப் பணிகள் முடிந்த பின்பு நெடு நாட்களாகியும் கூட அறை ஒதுக்கீடு செய்யப்பாமல் தற்காலிகமாக சேலம் நாட்டாண்மை கழக வளாகத்தில் உள்ள கார் செட்டின் ஒரு பகுதியை செய்தியாளர் அறையாகத் தடுத்து ஒதுக்கப் பட்டது. பி.ஆர்.ஓ. பழனியைக் கேட்டால் ஆட்சியர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்றும், ஆட்சியரைக் கேட்டால் பி.ஆர்.ஓ.விடம் செய்தியாளர் அறையை ஒப்படைக்கச் சொல்லி விட்டதாகவும் தொடர்ந்து விளையாட்டு காட்டி வந்தனர் இந்த இரு அதிகாரிகளும்...

செய்தியாளர்களுக்கு வழங்கப் பட வேண்டிய அடையாள அட்டையைக் கூட வழங்காமல் பொறுப்பற்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வந்தது. சேலத்தைப் பொறுத்த மட்டில் போலி செய்தியாளர்கள் நிறைய பேர் உலா வந்து கொண்டுள்ளனர் அது தடுக்கப் பட சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நமது அமைப்பின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப் பட்டது. செவிடன் காது சங்காக இதைக் கண்டு கொள்ளாமல் இருந்த சேலம் மாவட்ட நிர்வாகத்தினைக் கண்டித்து செய்தியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தனகளது எதிர்ப்பை பதிவு செய்த பின்பே ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு ஓரமாக இருந்த பழைய கட்டிடம் ஒன்றின் முதல் மாடியை செய்தியாளர் அறைக்காகப் பெருந்தன்மையுடன் ஒதுக்கித் தந்தார்.

அடுத்ததாக அடையாள அட்டையை நாளிதழ்களின் செய்தியாளர்களுக்கு  மட்டுமே வழங்குவேன் வாரமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களுக்கு  வழங்க மாட்டேன். இதற்கு முன் சேலத்தில் இருந்த ஆட்சியர்களும் பி.ஆர்.ஓ.க்களும் செய்த தப்பை நான் செய்ய மாட்டேன். எல்லாமே சட்டப்படிதான் செய்வேன் என்று சண்டித்தனம் செய்த பி.ஆர்.ஓ.வுக்கு சட்டப்படி சென்னைக்கு செல்ல பதவி உயர்வு உத்தரவு வந்து பல மாதங்கள் ஆன போதிலும் அதனை இவர் சட்டை செய்யவே இல்லை. இன்றுவரை சேலத்திலேயே விதிமுறைகளுக்கு மாறாக இருந்து வருகிறார்.  வாரமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடையாள அட்டைகள் மறுக்கப்படாமல் வழங்கப்பட்டு உள்ளன சேலத்தைத் தவிர! சேலத்திலும் கடந்த ஆண்டுவரையில் இருந்த ஆட்சியர்களும் பி.ஆர்.ஓ.க்களும் அதனை வழங்கி வந்தனர்.

பி.ஆர்.ஓ. பழனிசாமியின் மீதான பாலியல்   குற்றச்சாட்டு ஒன்றினை அவர் கேட்டுக் கொண்டும் அதற்கு மசியாமல் தக்க ஆதாரங்களுடன் வாரமிருமுறை இதழ் ஒன்றில் படங்களுடன் செய்தி வெளியாகி இருந்ததே பி.ஆர்.ஓ.வின் கோவத்துக்கான காரணம்! ஆனால் தன்னைப் பற்றியும் ஆட்சியரைப் பற்றியும் பாசிடிவ்வாக ஒரு வாரமிருமுறை இதழில்  செய்தி வெளியிட வைத்து அதன் செய்தியாளர்களுக்கு அரசின் வாகன அடையாள ஸ்டிக்கர் மற்றும் செய்தியாளர் அடையாள அட்டையினை வழங்கி  உள்ளார் இந்த நேர்மையாளர்!

எல்லாவற்றையும் விட உச்சகட்டமாக தனது பதவி அதிகாரத்தினைத் தவறாகப் பயன்படுத்தி சேலம் செய்தியாளர்களின் மனத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளார் சேலம் செய்தி மாக்கள் தொடர்பு அலுவலர். கடந்த தி.மு.க. ஆட்சியின் போ து தகுதி திறமை பணிமூப்பு இன்னபிற விஷயங்களுக்கு அப்பாற்பட்டு  அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஆதரவு நிலைப்பாடு கொண்ட செய்தியாளர்கள் சுமார் முப்பது பேர் ரகசியமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மட்டும் சலுகை விலையில் வீட்டுமனை வழங்கப் பட்டது. இந்தத் துரோகத்தைப் பற்றி அப்போதைய முதல்வரிடத்தில் செய்தியாளர்கள் புகார் தந்தும் அது கண்டு கொள்ளப்படவில்லை.

கடந்த ஆட்சியின் போது நடந்த துரோகத்துக்கு மருந்திட முயற்சிகள்  தற்போது நடக்கும்  ஆட்சியில் செய்தியாளர்களாகிய நாங்கள் மேற்கொண்டோம். கடந்த ஆட்சியின் போது  ஒதுக்கி வைக்கப்பட்ட  செய்தியாளர்களில் தகுதி திறமை பணிமூப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்களுக்கு வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்து  ஆட்சியரிடம் நடையாய் நடந்தோம். பி.ஆர்.ஓ.விடமும் பரிந்துரைக்க வேண்டினோம்.

ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத பி.ஆர்.ஓ. நம்மைக் கேலி செய்யும் விதத்தில் வேறு ஒரு காரியத்தினை ஆட்சியரிடத்தில் பரிந்துரைத்து செய்து கொடுத்தார். 

திருநங்கைகளுக்கு இலவசவீட்டுமனையினைப் பெற்றுத் தந்ததே அது! 



(இரண்டாவது படத்தைச்  சற்று கூர்ந்து பாருங்களேன்... நீல சேலையுடுத்தி சற்று அழகாக நிற்கும் திருநங்கையை ,சொல்லத்தான் நினைக்கிறேன் கமல்ஹாசன் கணக்காக பி.ஆர்.ஓ. பழனிசாமி மோகத்துடன்  பார்த்துக் கொண்டு நிற்பது தெரிகிறதா? திருநங்கைக்கே இந்த பார்வை பார்ப்பவர் பிற நங்கைகளிடத்து எப்படி நடந்து கொள்வாரோ?!)

செய்தியாளர்கள் சலுகை விலையில் வீட்டுமனை வழங்கிடக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.... அது கண்டு கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டு  "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை" என்ற கதையாக இலவசமாகத் திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டிருப்பதை என்னவென்று சொல்ல!

இந்தக் குமுறல்கள் தமிழக முதல்வரிடதிலும் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநரிடத்திலும் விரைவில் முறையீடாக நம்மால் வைக்கப்பட உள்ளன. தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் எங்களது குறைகளைக் களைந்து மனக்காயங்களுக்கு மருந்திடுவார் என்ற நம்பிக்கையை இன்னும் நாங்கள் இழக்க வில்லை.

சேலம் ஆட்சியர் மகரபூஷணம் மற்றும் பி.ஆர்.ஓ. பழனிசாமி ஆகியோரின் பத்திரிகையாளர்  விரோதப் போக்கினைக் கண்டித்து வெளியான நமது முந்தைய பதிவுகள்...

http://salemdistpress.blogspot.in/2011/06/blog-post_9564.html

http://salemdistpress.blogspot.in/2011/07/blog-post_23.html

http://salemdistpress.blogspot.in/2011/08/blog-post_5204.html

http://salemdistpress.blogspot.in/2011/10/blog-post_10.html

http://salemdistpress.blogspot.in/2011/12/blog-post_1297.html

http://salemdistpress.blogspot.in/search?updated-min=2011-01-01T00:00:00-08:00&updated-max=2012-01-01T00:00:00-08:00&max-results=50

சேலத்துச் செம்மல்கள்!.....




சேலத்துச் செம்மல்களைப் பற்றி 
கடந்த வாரம் காலைக் கதிர் நாளிதழில் வெளியான செய்தி!