Pages

Wednesday, 5 September 2012

போதையில் ஆட்டம் போட்ட போலீஸ்காரர்!

நாகர்கோவிலில் நடந்த அசிங்கம் இது.....


நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் சாலையில் போதை தலைக்கேற போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் சாலையில் சென்றவர்களிடம் எல்லாம் வம்பிழுத்து கலாட்டா செய்த காட்சி இது... 

இந்தக் கண்ணியம் மிக்க காவலர் அந்தச் சாலையில் சென்ற சிறுவயது பெண்களைப் பார்த்து விசிலடித்து சைகை செய்திருக்கிறார். அதே போல பர்தா  அணிந்து சென்ற பெண் ஒருவரைப் பார்த்து ஆபாச வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். இது போதாது என சாலையோரத்துப் பழக் கடைக்காரர்களிடம் ஓசியில் பழம் தரச் சொல்லி கலாட்டா செய்கிறார். 

இதைப் பார்த்து பொறுக்கமுடியாத பொது ஜனம் ஒருவர் "நீங்களே இப்படி செய்யலாமா?" என்று கேட்க "உன்னைக் கொன்னுருவேன்" என்று அவரை நாக்குழற எச்சரிக்கிறார்... 

"போதையை போட்டுக்கிட்டு வீட்டில இருக்க வேண்டியதுதானே...." என்று ஆதங்கத்துடன் கேட்ட ஒருவரிடம்... "ஏன் நீ லீவு வங்கித் தாயேன்" என்று நக்கலடிக்கிறார்...

தன்னைத் தட்டிக் கேட்டவர்களிடத்தில் "நீ என்ன ரௌடியா?" என அந்த போலீஸ்காரர் கேட்க, "உங்களை தப்பு செயாதேனு தட்டிக் கேட்ட பொதுஜனத்தைக் கொன்னுடுவேன்  என மிரட்டின நீங்கதான் சார் நிஜ ரௌடி" என பஞ்ச்சிங்காக பதில் வர அதற்கு மேல் அவரால் எதுவும் பேச முடியவில்லை.

இந்தக் காட்சிகளை சிலர் படம் பிடிக்க, "நல்லா படம் பிடிச்சி நாளைக்குக் காலைல செய்தியா பத்திரிகைல வர்ற மாதிரி போடுங்க சார்!" என ஒருவர் சொல்ல... அதற்கும் சளைக்காமல் அந்தக்  கர்ம வீரர் "ஆமா எல்லா பத்திரிகைளையும் வரணும்" என்கிறார் சளைக்காமல்! 

இந்தக் கூத்துகளை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அவசர போலீஸ் அழைப்பு எண்ணுக்கும் அழைத்து பொது மக்கள் புகார் செய்தும் ஒருவர் கூட அந்த இடத்தை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்பதுதான் ஹை லைட்டே! 

போலீஸ் லட்சணத்தைப் பார்த்துக்குங்க சார்!

நன்றி: சுகந்தி தமிழச்சி

Tuesday, 4 September 2012

தமிழரால் உருவாக்கப்பட்டதுதான் இ மெயில்!


இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை அல்லவா…


அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

ஆம்… அதுதான் உண்மை. இன்று உலகையே ஒரு வலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இ மெயில் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒருவர்தான் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. 


இன்றைக்கு 49 வயது நிரம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.


இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From:”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.




ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.


நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.




இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் ‘இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், அதன் சார்பில் இந்தப் போட்டியை அறிவித்துள்ளார்.


நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: சுகந்தி தமிழச்சி

Friday, 24 August 2012

பத்திரிகையாளர் மீது தாக்குதல்......


அன்பார்ந்த பத்திரிக்கையாள நண்பர்களே... 

இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூஸ், சென்னை  ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக புகைப்படம் எடுக்கச் சென்றபோது, பேராசிரியர் பிரகாஷ் மய்யா என்பவரால் தாக்கப்பட்டிருக்கிறார். 


புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூஸ் தாக்கப்பட்டது குறித்து கொடுத்த புகாரை பதிவு செய்ய காவல்துறையோடு கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஆனால், அதே சமயம் ஐஐடி ஹாஸ்டல் வார்டன் அளித்த புகாரின் பேரில், பெண்களை மானபங்கப்படுத்த முயன்றதாக புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூ மீது பொய்யாக வழக்கைப் பதிவு செய்துள்ளது காவல்துறை. 

ஆல்பின் மேத்யூசைத்  தாக்கிய பேராசிரியரைக் கைது செய்யாத காவல்துறை, ஐஐடியின் செக்யூரிட்டிகளை மட்டும் கைது செய்துள்ளது. ஏழை உழைப்பாளிகளை கைது செய்யும் காவல்துறை, பேராசிரியர் என்றதும் நடுங்குகிறது.

இன்று இந்த அநியாயத்தை அனுமதித்தால், நாளை பத்திரிக்கையாளர்கள் எல்லா இடங்களிலும் தாக்கப்படுவார்கள். இந்தச் சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டியது நம் கடமை.