Pages

Saturday 14 September 2013

அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். 


தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)


தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009. 
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929 

E-Mail : cmcell@tn.gov.in"

Thursday 12 September 2013

படித்ததில் பிடித்தது: உயிர் உடைத்த புகைப்படம்...



புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.


‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.


அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.

( நன்றி சமரசம் இதழ்)

Wednesday 4 September 2013

வெட்கம்! வெட்கம்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செய்தியாளர்களுக்கும் ஆட்சித் தலைவர் கையொப்பமிட்ட செய்தியாளர் அடையாள அட்டை  அந்தந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம் மூலமாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்தது.


என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, இப்படி வழங்கப்பட்டு வந்த செய்தியாளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டுடன் முற்றுப்புள்ளியை வைத்து விட்டது தமிழக அரசு! 

நடப்பு  ஆண்டான  2013இல் இருந்து தாங்கள் பணிபுரியும் பத்திரிக்கை அலுவலகங்கள் வழங்கியுள்ள செய்தியாளர் அடையாள அட்டையைக் காண்பித்தே செய்தியாளர்கள் செய்தி சேகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தேவை இல்லாத குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.


இந்த  ஆண்டு  செய்தியாளர் அடையாள அட்டை அரசால்  நிறுத்தப்பட்டு விட்டது என்ற  விபரம் கூட அரசு அதிகாரிகள் பலருக்கும் தெரியவில்லை. இருந்த போதிலும்   அரசால் வழங்கப்படாத  செய்தியாளர் அடையாள அட்டையைக் கேட்டு இந்த அதிகாரிகள் செய்தியாளர்களை  மரியாதைக் குறைவாக நடித்தி வரும் சம்பவங்களுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை!

சேலத்தினைப் பொறுத்த மட்டில் இப்படிப்பட்ட சம்பவங்கள் கொஞ்சம் அதிகம்! கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு சம்பவங்கள் செய்தியாளர்களை அவமானப்படுத்தப்படுவது போல நடந்துள்ளன. 

முதல் சம்பவம்: 

ஏற்காடு இடைத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் சேலம் தேர்தல் அலுவலகம் வந்திறங்கியது பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடத்தில்  அங்குள்ள பொறுப்பான அதிகாரிகள் அரசு தந்த அடையாள அட்டையைக் காட்டுபவர்களை மட்டுமே அனுமதிப்போம் என்று கறாராகக் கூறி உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இந்த ஆண்டு எங்களுக்கு அரசு செய்தியாளர் அடையாள அட்டையைத் தரவே இல்லை. எங்களுக்கு வழங்கப்படாத  அடையாள அட்டையை  எங்களிடம் கேட்டால் எப்படி என்று செய்தியாளர்கள் தரப்பில் கூற அதை அதிகாரிகள் தரப்பு ஏற்கவில்லை. தடித்த வார்த்தைகளால் தங்களின் அதிகாரத்தினைக் காட்டவே அவர்கள் முயன்றனர்.


பின்னர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வந்து நிலைமையை விளக்கிய பிறகு மாவட்ட தேர்தல் அலுவலரால் அவரது அலுவலகத்துக்கு வந்து செல்ல தற்காலிகமாக அடையாளக் குறிப்பு ஒன்று அங்கிருந்த செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இரண்டாவது சம்பவம்: 


கடந்த 03.09.2013 அன்று சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த வின் டி.வி. செய்தியாளர் ஹரிஹரசுகன் அந்த அலுவலகத்தின் முகப்பினை படம் பிடித்துக் கொண்டிருந்த போ து அவரைத் தடுத்த காவலர்கள் அவரை தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜு முன்பாகக் கொண்டு போய் நிறுத்தி உள்ளனர்.


தன் முன்பாக நிறுத்தப்பட்ட செய்தியாளர் ஹரிஹரசுகனிடம் "நீ யார்? உன்னுடைய அடையாள அட்டை எங்கே?... "என்று ஒருமையில் ஒரு கிரிமினலை மிரட்டுவதைப் போல பேசி இருக்கிறார் ஆய்வாளர் ராஜு. அவருக்குத் துணையாக உதவி ஆய்வாளர் செல்வராஜ் தன் பங்கிற்கு தரக்குறைவான வார்த்தைகளைப் பகிர்ந்துள்ளார்.


தன்னுடைய அலுவலகம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையினை ஹரிஹரசுன்  காட்டிய போதிலும் அதை ஏறிட்டுக் கூடப் பார்க்க மறுத்த அந்த அதிகாரிகள் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால் அதனைக் காட்டு... இல்லையானால் வெளியேறு என்று வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவரை வெளியேற்றி உள்ளனர்.

செய்தியாளர் ஹரிஹரசுகனைத் தெரியாதவர்கள் அல்ல இந்த அதிகாரிகள்! வந்தவர் செய்தியாளரா என்று உறுதி செய்து கொள்ள செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியினைத தொடர்பு கொண்டு கேட்டு இருக்கலாம். அல்லது சக செய்தியாளர்களிடத்தில் ஹரிஹரசுகனைப் பற்றி விசாரித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல் ஆணவப் போக்கோடு அவர்கள் நடந்து கொண்டுள்ளனர்.


அரசியல்வா(வியா)திகளும். இடைத்தரகர்களும் தங்களது சொந்த வீட்டினைப் போல சர்வ சுதந்திரமாக   சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் நடமாடிக் கொண்டிருப்பது இன்றளவிலும் நடந்து கொண்டுதான் உள்ளது.  அவர்களுக்கு இதே அதிகாரிகள் கூழைக்கும்பிடு போட்டு ராஜமரியாதை செய்வதும் அன்றாடம் நடக்கவே செய்கிறது. 

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் செய்தியார்கள்தாம் இளைத்தவர்கள் போல! 

அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளின் அல்லக்கைகளிடம் அதிர்ந்து கூட பேசத் திராணி இல்லாமல் அவர்களிடம் மண்டி இடும் உங்களது வீரத்தை எங்களிடம் கட்டுவதுதானா ஆண்மை? வெட்கம்!! வெட்கம்!!

இதுபோன்ற  அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் தன்னுடைய கண்டனங்களைத் தெரிவிக்கிறது. உயரதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடவாமல் பார்த்துக் கொள்வதுடன் செய்தியாளர்களுடன் நல்லுறவினை கடைபிடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். 

அதேபோல ஒரு மாவட்டத்தில் பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு  மீண்டும் அரசாங்கம் அடையாள அட்டையினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

தேவை இல்லாத குழப்பங்களுக்கு இதனால் முற்றுப் புள்ளியினை வைக்க முடியும். அதே சமயத்தில் போலி செய்தியாளர்களை இதன் மூலம் இனம் கண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கையினை எடுக்க அது பேருதவியாகவும் இருக்கும்!