Pages

Thursday 7 November 2013

இசைப்பிரியாவின் இரக்கமற்ற கொலைச் சம்பவம் !


கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 
அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு !

1. காட்சி ஊடகவியலாளர் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் சிறைப்பிடித்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்ததாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் இது தொடர்பான சர்வதேச விசாரணக்கு உத்தரவிட வேண்டும்.


2. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது.

3. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நிரந்தரமாக விலக்கி வைக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இடம் : சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில்.

நாள் : 09.11.2013, சனிக்கிழமை / நேரம் : 4.30 மணி மாலை.

ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பு :
ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஆஃப் தமிழ்நாடு

Saturday 14 September 2013

அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். 


தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)


தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009. 
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929 

E-Mail : cmcell@tn.gov.in"

Thursday 12 September 2013

படித்ததில் பிடித்தது: உயிர் உடைத்த புகைப்படம்...



புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.


‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.


அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.

( நன்றி சமரசம் இதழ்)

Wednesday 4 September 2013

வெட்கம்! வெட்கம்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செய்தியாளர்களுக்கும் ஆட்சித் தலைவர் கையொப்பமிட்ட செய்தியாளர் அடையாள அட்டை  அந்தந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம் மூலமாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்தது.


என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, இப்படி வழங்கப்பட்டு வந்த செய்தியாளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டுடன் முற்றுப்புள்ளியை வைத்து விட்டது தமிழக அரசு! 

நடப்பு  ஆண்டான  2013இல் இருந்து தாங்கள் பணிபுரியும் பத்திரிக்கை அலுவலகங்கள் வழங்கியுள்ள செய்தியாளர் அடையாள அட்டையைக் காண்பித்தே செய்தியாளர்கள் செய்தி சேகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தேவை இல்லாத குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.


இந்த  ஆண்டு  செய்தியாளர் அடையாள அட்டை அரசால்  நிறுத்தப்பட்டு விட்டது என்ற  விபரம் கூட அரசு அதிகாரிகள் பலருக்கும் தெரியவில்லை. இருந்த போதிலும்   அரசால் வழங்கப்படாத  செய்தியாளர் அடையாள அட்டையைக் கேட்டு இந்த அதிகாரிகள் செய்தியாளர்களை  மரியாதைக் குறைவாக நடித்தி வரும் சம்பவங்களுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை!

சேலத்தினைப் பொறுத்த மட்டில் இப்படிப்பட்ட சம்பவங்கள் கொஞ்சம் அதிகம்! கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு சம்பவங்கள் செய்தியாளர்களை அவமானப்படுத்தப்படுவது போல நடந்துள்ளன. 

முதல் சம்பவம்: 

ஏற்காடு இடைத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் சேலம் தேர்தல் அலுவலகம் வந்திறங்கியது பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடத்தில்  அங்குள்ள பொறுப்பான அதிகாரிகள் அரசு தந்த அடையாள அட்டையைக் காட்டுபவர்களை மட்டுமே அனுமதிப்போம் என்று கறாராகக் கூறி உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இந்த ஆண்டு எங்களுக்கு அரசு செய்தியாளர் அடையாள அட்டையைத் தரவே இல்லை. எங்களுக்கு வழங்கப்படாத  அடையாள அட்டையை  எங்களிடம் கேட்டால் எப்படி என்று செய்தியாளர்கள் தரப்பில் கூற அதை அதிகாரிகள் தரப்பு ஏற்கவில்லை. தடித்த வார்த்தைகளால் தங்களின் அதிகாரத்தினைக் காட்டவே அவர்கள் முயன்றனர்.


பின்னர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வந்து நிலைமையை விளக்கிய பிறகு மாவட்ட தேர்தல் அலுவலரால் அவரது அலுவலகத்துக்கு வந்து செல்ல தற்காலிகமாக அடையாளக் குறிப்பு ஒன்று அங்கிருந்த செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இரண்டாவது சம்பவம்: 


கடந்த 03.09.2013 அன்று சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த வின் டி.வி. செய்தியாளர் ஹரிஹரசுகன் அந்த அலுவலகத்தின் முகப்பினை படம் பிடித்துக் கொண்டிருந்த போ து அவரைத் தடுத்த காவலர்கள் அவரை தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜு முன்பாகக் கொண்டு போய் நிறுத்தி உள்ளனர்.


தன் முன்பாக நிறுத்தப்பட்ட செய்தியாளர் ஹரிஹரசுகனிடம் "நீ யார்? உன்னுடைய அடையாள அட்டை எங்கே?... "என்று ஒருமையில் ஒரு கிரிமினலை மிரட்டுவதைப் போல பேசி இருக்கிறார் ஆய்வாளர் ராஜு. அவருக்குத் துணையாக உதவி ஆய்வாளர் செல்வராஜ் தன் பங்கிற்கு தரக்குறைவான வார்த்தைகளைப் பகிர்ந்துள்ளார்.


தன்னுடைய அலுவலகம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையினை ஹரிஹரசுன்  காட்டிய போதிலும் அதை ஏறிட்டுக் கூடப் பார்க்க மறுத்த அந்த அதிகாரிகள் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால் அதனைக் காட்டு... இல்லையானால் வெளியேறு என்று வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவரை வெளியேற்றி உள்ளனர்.

செய்தியாளர் ஹரிஹரசுகனைத் தெரியாதவர்கள் அல்ல இந்த அதிகாரிகள்! வந்தவர் செய்தியாளரா என்று உறுதி செய்து கொள்ள செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியினைத தொடர்பு கொண்டு கேட்டு இருக்கலாம். அல்லது சக செய்தியாளர்களிடத்தில் ஹரிஹரசுகனைப் பற்றி விசாரித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல் ஆணவப் போக்கோடு அவர்கள் நடந்து கொண்டுள்ளனர்.


அரசியல்வா(வியா)திகளும். இடைத்தரகர்களும் தங்களது சொந்த வீட்டினைப் போல சர்வ சுதந்திரமாக   சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் நடமாடிக் கொண்டிருப்பது இன்றளவிலும் நடந்து கொண்டுதான் உள்ளது.  அவர்களுக்கு இதே அதிகாரிகள் கூழைக்கும்பிடு போட்டு ராஜமரியாதை செய்வதும் அன்றாடம் நடக்கவே செய்கிறது. 

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் செய்தியார்கள்தாம் இளைத்தவர்கள் போல! 

அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளின் அல்லக்கைகளிடம் அதிர்ந்து கூட பேசத் திராணி இல்லாமல் அவர்களிடம் மண்டி இடும் உங்களது வீரத்தை எங்களிடம் கட்டுவதுதானா ஆண்மை? வெட்கம்!! வெட்கம்!!

இதுபோன்ற  அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் தன்னுடைய கண்டனங்களைத் தெரிவிக்கிறது. உயரதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடவாமல் பார்த்துக் கொள்வதுடன் செய்தியாளர்களுடன் நல்லுறவினை கடைபிடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். 

அதேபோல ஒரு மாவட்டத்தில் பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு  மீண்டும் அரசாங்கம் அடையாள அட்டையினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

தேவை இல்லாத குழப்பங்களுக்கு இதனால் முற்றுப் புள்ளியினை வைக்க முடியும். அதே சமயத்தில் போலி செய்தியாளர்களை இதன் மூலம் இனம் கண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கையினை எடுக்க அது பேருதவியாகவும் இருக்கும்!





Friday 23 August 2013

பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்!

கடந்த டிசம்பர்  மாதம் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி ஒருவரைப் பலர் கற்பழித்த காட்டுமிராண்டிதானத்தை நினைவுபடுத்தும் வகையில் அதே போன்று மற்றும் ஒரு சம்பவம் மும்பையில் கடந்த இருபத்தியிரண்டாம் தேதி நடந்ததுள்ளது.


இந்த முறை பாலியல் வன்முறைக்கு ஆளானவர் மும்பையில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்படச் செய்தியாளராகப் பணியாற்றி வந்த இருபத்தியிரண்டே  வயதான துடிப்பான ஒரு இளம்பெண். அந்தப் பத்திரிகையில் துணிச்சலான பல தொடர் கட்டுரைகளைப் புகைப்படங்களுடன் தந்து பிரபலமானவர்.

கடந்த 22ந்  தேதி  மாலை 7 மணிக்கு மும்பை மகாலட்சுமி ரெயில் நிலையத்தையொட்டியுள்ள பழங்கால கட்டடமான சக்தி மில் பற்றி கட்டுரை எழுதுவதற்காக அந்தக்  கட்டடத்தை படம் பிடிக்கச் சென்றார். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி என்பதால் அவருக்கு உதவியாக அவரது அலுவலகத்தைச் சேர்ந்த ஆண் நண்பர் ஒருவரும் உடன் சென்றுள்ளார்.


அந்த சமயத்தில் அங்கு வந்த இரண்டு பேர் கட்டடத்தின் உள்ளே படம் எடுக்க சிறப்பு அனுமதி தேவை என்றும் போட்டோ எடுக்க அனுமதி வாங்கித் தருவதாகவும் சொல்லி  அவர்களை அந்தப்  பழைய கட்டிடத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர்.  அவர்கள் அங்கு சென்ற கொஞ்ச நேரத்துக்குள்ளாக திடீர் என்று மேலும் மூன்று பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவ ரும் குடிபோதையில் இருந்தனர். அதன் பிறகு நிலைமை அப்படியே மாறிப் போனது.

ஐந்து பேருமாக ஒன்று சேர்ந்து பெண் போட்டோகிராபரின் நண்பரைத் தனியே இழுத்து அடித்து தாக்கி கட்டிப் போட்டனர். பின்னர் அந்த பெண்ணை கட்டிடத்தின் உள்ளே இழுத்துச் சென்று கற்பழித்தனர்.  அந்த மனித மிருகங்களின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தனது  வலிமையைத் திரட்டிக் கடுமையாகப் போராடியும்  எடுபடவில்லை. கூச்சல் போட விடாமல் அவரது வாயையும் அடைத்து வன்புணர்வு நடந்தது.


பின்னர் இருவரையும் அங்கேயே போட்டு விட்டு ரெயில் தண்டவாளம் வழியாக தப்பி ஓடி விட்டனர். அதன்பிறகு ஆண் நண்பரும் அந்தப் பெண்ணும் தட்டுத்தடுமாறி வெளியே வந்தனர். உடனே இருவரையும் ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் போலீசில் புகார் செய்ப்பட்டது. கும்பல் தாக்குதலில் நண்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதே போல் அந்த பெண்ணுக்கு உள்காயமும், அதிகமான ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் என்பதால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜோஷி மார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸ் படை விரைந்து சென்று பார்வையிட்டது. மும்பை போலீஸ் கமிஷனர் கூறுகையில், கற்பழிப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்ததேகிக்கப்படும்  8 பேரைப் பிடித்து அவர்களிடம் விசாரணை செய்து வருகிறோம்.  விரைவில் குற்றவாளிகள்  பிடிபடுவார்கள் என்று தெரிவித்தார்.


பெண் போட்டோகிராபர் தெரிவித்த அடையாளங்களை வைத்து 5 குற்றவாளிகளின் உருவப்படத்தை வரைந்து போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்களை போலீசார் 18 தனிப்படை அமைத்து தேடுகிறார்கள். மராட்டிய உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பட்டீல் ஆஸ்பத்திரிக்கு சென்று பெண் போட்டோகிராபரை பார்த்து ஆறுதல் கூறினார்.

 பெண்கள் வசிக்கப் பாதுகாப்பற்ற நாடு என்று தொலைகாட்சி ஒன்றில் வெளியான தகவல் உண்மைதான் என்பதுபோல நடந்துள்ள இந்தச் சம்பவம் தெற்கு ஆசிய நாடுகளில் அதிர்ச்சிப் பேரலைகளை உருவாக்கி உள்ளது. 


இந்தச் சம்பவத்துக்கு சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றமும் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Saturday 15 June 2013

எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்!


'ஆனந்த விகடன்'தான் என் தாய் வீடு! 'விகடன்' என்ற பத்திரிகைப் பல்கலைக் கழகத்தில் பாடம் பயின்றவன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.

எனக்குக் கொடுக்கப்பட்ட பாடங்கள் என் தொழிலுக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கும் நிறைய இனிப்பு சேர்த்திருக்கின்றன். இதோ ஒரு பருக்கைச் சோறு...

அப்போது நான் இளமைத் துடிப்புள்ள மாணவப் பத்திரிகையாளன். விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் புதுச் சேர்க்கை.

பொறியியல் பட்டப்படிப்பின் நான்காவது(இறுதி) வருடம் பயிலும்போதுதான் இந்த வாய்ப்புக் கிடைத்தது. அதனால் பகுதி நேரப் பத்திரிகைப் பணிக்கு அதிக நேரம் செலவிட முடியாமல் போய் விட்டது(அப்படியும் விகடன் தேர்வில் OUTSTANDING STUDENT REPORTER ஆக தேர்ச்சிபெற்றுவிட்டதால் அந்த பொறியியல் பட்டதாரி அத்தோடு தொலைந்தான்!!).

கிடைக்கும் சொற்ப நிமிட அவகாசங்களில் பிரசுரிப்புக்குத் தேறும் செய்திகளை சேகரிக்கப் 'பர பற'ப்பேன். மூன்று கற்களில் இரண்டு மாங்காய் - இதுதான் நான் அப்போது எனக்கு வகுத்துக் கோண்டிருந்த ஃபார்முலா. அதாவது மூன்று மேட்டர்கள் எழுதிஅனுப்பினால் அதில் இரண்டாவது பிரசுரமாகிவிட வேண்டும்!

ஒரு சில மாணவ நிருபர்களுக்கே கிடைத்த அந்த அதிர்ஷ்டம் எனக்கும் கிடைத்தது. தொடர்ச்சியாக என் கட்டுரைகள் பிரசுரமாகி வந்தன.

இந்த சுயபுராணமெல்லாம் எதற்காக என்றால்... ஒரு கட்டுரை எழுதினால் அது பிரசுரமாகிவிட வேண்டும் என்பது எனக்கு எவ்வளவு அத்தியாவசியமானதாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான்.

சரி விஷயத்துக்கு வருகிறேன், புதிய ஊரில் ஒயின் ஷாப் தேடி அலையும் வெளியூர் குடிகாரன் மாதிரி செய்திக்காக நான் தேடலில் மும்முரமாயிருந்த ஒரு நாள்... ஒரு பொழுது..

"எப்படியும் இருபது முப்பது பேராவது இருக்கும்... அத்தனை பேர்கிட்டயும் அவங்க நிலப்பத்திரங்களை அடகு வாங்கிக்கிட்டு, எல்லோரையும் கொத்தடிமைகளா வச்சிருக்காரு ஒரு பெரிய மனுஷன்" என்ற அதிர்ச்சிகரத் தகவல் சொன்னார் ஒரு நண்பர். சிகப்புச் சட்டைக்காரர் அவர்.

அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பல செய்திகளை கட்டுரையாக்கி இருக்கிறேன். நம்பத் தகுந்த 'துப்புக் கொடுப்பாளர்'.

'ஆஹா.. சில்லறை மீனுக்கு ஆசைப்பட்டால் சுறா மீனே வந்து விழுந்திருக்கே!' என சந்தோஷப்பட்டேன்.

இந்த இடத்தில் ஒரு இடைச் செருகல்... பத்திரிகையாளன் அதுவும் புலனாய்வுப் பத்திரிகையாளன் என்றால் இப்படித்தான்! கெட்டசெய்தி எதுவும் கேள்விப்பட்டால் 'ஐயோ இப்படி நடந்துடுச்சே' என வருத்தப்படுவதற்கு முன்னால் 'சூப்பரான நியூஸ் கிடைச்சுருச்சு' என்ற சந்தோஷம் முந்திக் கொண்டு வந்து நிற்கும்.

எனக்கும் அப்படியே! நின்றது!!

காலேஜுக்கு கட் அடித்துவிட்டு செய்தி சேகரிக்கப் புறப்பட்டேன். கொடைக்கானலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மலைக்கிராமத்துக்குப் பயணம்.

மொத்தம் இருபத்தி நான்கு தொழிலாளர்கள், அத்தனை பேரும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து இரண்டு வருடங்களாகி இருக்கும். அனைவரும் கொத்தடிமைகள்! பஞ்சம் பிழைப்பதற்காக வீடு, வாசல், வயக்காடுகளை அந்தப் பெரிய மனிதரிடம் அடகு வைத்தவர்கள். குபு குபு'வெனக் குட்டி போடும் வட்டியைக்கூட கட்ட முடியாமல் தடுமாறியதால், அவர்களை கூலியில்லாத வேலைக்காரர்களாக தனது பண்ணைத்தோட்டத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர்.

தடி மீசை அடியாட்கள், கொலை வெறியோடு அலையும் வேட்டை நாய்கள், இத்யாதி இத்யாதி பாதுகாப்பு வளையங்களையெல்லாம் மீறி அப்பாவி அடிமைகள் அனைவரிடமும் பேசினேன்.

'போட்டோ புடிக்க வேண்டாம்' என்று முரண்டு பிடித்தவர்களை சமாளிக்க வேண்டியிருந்தது. 'நம்புங்கள்... பத்திரிகையில் போட்டோ போட மாட்டோம். ஆனால் இப்படி ஒரு விஷயம் நடப்பதை எங்கள் எம்.டி.(அப்போதைய ஆனந்த விகடன் ஆசிரியரான எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களை அலுவலகத்தில் எல்லோரும் இப்படித்தான் குறிப்பிட்டார்கள். கேள்விப்பட்டுக் கேள்விப்ப்ட்டு அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. இப்போதும்கூட 'எம்.டி' என்ற வார்த்தையைக் கேட்டதுமே எங்கிருந்தாலும் என் நினைவுக்குவரும் முதல் முகம் அவருடையதுதான்) நம்ப வேண்டும் அல்லவா! அதற்காக கட்டாயம் நான் போட்டோ அனுப்பியாக வேண்டும்' என்று கூறி சமாதானப் படுத்தினேன். வேண்டியமட்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.

அக்கம் பக்கத்தில் எல்லாம் விசாரித்துவிட்டு, மலையிறங்கினேன்.

அடுத்ததாக விஷயத்தின் வில்லனையும் நேரில் சந்தித்தாக வேண்டும். அதாவது அந்தப் பெரிய மனிதரை!

நிஜமாகவே ஊருக்குள் பெரிய மனிதர்தான். மரம் கடத்தல், டூப்ளிகேட் மதுபாட்டில், அடிதடி... என பல விஷ விஷயங்களில் அவரது பெயர் பிரபலம். அப்போதைய ஆளும் கட்சியின் செல்வாக்கு பெற்ற மனிதர். எம்.எல்.ஏ. ஒருவரின் நெருங்கிய உறவினர்.

இத்தனை 'அட்டாச்மெண்ட்கள்' இருந்ததால் அவர் முன் நின்று பேசவே நடுங்குவார்களாம் உள்ளூரில் பலரும். எனக்கென்ன நான்தான் வெளியூராச்சே!

அந்த (அ)சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கக் கிளம்பினேன். அடுத்த நாளும் காலேஜுக்கு கட்.

அந்த ஆளின் வீட்டுக்கு வழி கேட்டபோது ஊருக்குள் ஏற இறங்கப் பார்த்தபடியேதான் கை காட்டினார்கள். பயமில்லை என்றாலும் சின்னதாக தயக்கம் எனக்குள் முளைத்திருந்தது.

வேறு வழியே இல்லை, கட்டுரையை எழுதி முடிக்க வேண்டுமென்றால் அவரை பேட்டி எடுத்தே ஆக வேண்டும். அதுதான் விகடன் சம்பிரதாயம். 'ஒரு தரப்புச் செய்தியை மட்டும் வெளியிடக் கூடாது. எதிர் தரப்பிலும் கேட்டு எழுதியாக வேண்டும்' என எங்களுக்கு படித்துப் படித்து சொல்லிக் கொடுத்திருந்தார்கள். வியர்த்திருந்த உள்ளங்கையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு விடுவிடுவென 'பெரிய' வீட்டுப் படியேறிவிட்டேன்.

நல்ல விஷயத்துக்காக யாராவது நல்ல மனிதர்களைச் சந்தித்தால் 'ஆனந்த விகடன் நிருபர்' என் அறிமுகம் செய்து கொள்வோம். இப்போது அது தேவையில்லை...

"ஜூனியர் விகடன்ல இருந்து வர்றேன். சார்கிட்ட கொஞ்சம் பேசணும்."

உட்காரச் சொன்னார்கள். முரட்டு வீட்டை வேடிக்கை பார்த்தபடியே நான் இருக்க... ஓரிரு நிமிடங்களில் 'அவர்' வந்துவிட்டார். அந்த அவகாசத்தில் எனக்கு கொஞ்சம் தெனாவெட்டு வந்துவிட்டது.

''வாங்க தம்பி'' என்றார். என் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன்.

வாங்கியவர் அதை அலட்சியமாகப் பார்த்தார். என்னையும் ஏற இறங்கப் பார்த்தார்.

அதில் 'STUDENT REPORTER - TRAINEE' என இருந்தது. அதைப் பார்த்துத்தான் அவ்வளவு அலட்சியம் காட்டுகிறார் என நானே நினைத்துக் கொண்டேன். 'வைக்கிறேண்டி உனக்கு ஆப்பு' என மனதில் கறுவிக்கொண்டே பேச ஆரம்பித்தேன்...

"கொடைக்கானல் மலைப்பக்கம் இருக்க உங்க தோட்டத்துல இருபத்திநாலு பேரை கொத்தடிமையா வச்சிருக்கீங்களே! அதப் பத்தி உங்ககிட்ட பேசணும்"

பேசியபடியே அவர் முகத்தையே உற்றுப் பார்த்தேன். ரியாக்சனுக்கு ஏற்ற எதிர்க் கேள்வியை எடுத்துவிட வேண்டுமே!

"நீங்கதான் நேத்து அங்க போயி விசாரிச்ச ஆளா?" என்றார்.

அடப்பாவி! ரகசியமாக விசாரணை செய்ததாக நான் நினைத்துக் கொண்டிருக்க, அது இந்த ஆளுக்கும் தெரிந்திருக்கிறதே!

"ஆமா சார்" சொன்னேன்.

கண்களை மூடி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். கையோடு கொண்டு போயிருந்த ஆட்டோஃபோகஸ் கேமராவை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தேன்.

"தம்பி, கேமராவ முதல்ல உள்ள வைங்க'' என்றார் அவர்.

"இல்ல சார்... அது வந்து..." என் ஏதோ பேச ஆரம்பிக்க நான் முயல... தொண்டையை செருமிக் கொண்டு பேசலானார் அவர்.

''தம்பி இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வாங்கள்ல அதான் தைரியமா இந்த பிரச்னைல இறங்கியிருக்கிங்க. சரி, நாம ஒரு டீலுக்கு வருவோம். அந்த இருபத்திநாலு பேர்கிட்டயும் அவங்கவங்க பத்திரத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்துர்றேன். வாங்குன கடனையும் தள்ளுபடி செஞ்சுர்றேன். பிரச்னய இத்தோட விட்ருங்க. புக்ல மேட்டர போட்றாதீங்க.''

வெலவெலத்து விட்டேன் நான். இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை!

என்னாது.... சின்னப்புள்ளயாட்டம்?!

அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் அலுவலகத்தில் பேசி முடிவு சொல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டேன். மனது முழுக்க குழம்பிப் போயிருந்தேன். எனது இரண்டு நாள் உழைப்பு அது. செய்தி வெளியானால் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும். OUTSTANDING REPORTER ஆக தேர்வாக இந்தக் கட்டுரை கை கொடுக்கும்.

வழியிலேயே எஸ்.டி.டி. பூத்துக்குள் புகுந்து சென்னைக்குப் போன் போட்டேன்.

மறு முனையில் விகடன் அலுவலகம். நடந்ததையெல்லாம் விலாவாரியாகச் சொன்னேன்.

அரை மணி நேரம் கழித்து மறுபடியும் போன் பண்ணச் சொன்னார் சுபா. அவர்தான் நான் உட்பட மதுரைப்பக்கம் இருக்கும் அந்த வருடத்து மாணவ நிருபர்களையெல்லாம் வழி நடத்தியவர்(இப்போது ராடன் டி.வி.யின் க்ரியேடிவ் ஹெட்).

அடுத்த முப்பத்தொன்றாவது நிமிடம் மறு போன் போட்டேன். என் காதுகளும் பதைபதைப்போடு காத்திருந்தன.

''அந்த மேட்டர எழுதவேணாம்னு எம்.டி. சொல்லிட்டாரு.."

என் தலையில் இடி இறங்கியது. என் உழைப்பெல்லாம் வேஸ்ட்!

என் அமைதியை யூகித்துவிட்ட சுபா தொடர்ந்து பேசினார்.. ''எம்.டி. என்ன ஃபீல் பண்றார்னா... நாம செய்தி வெளியிடுறதோட நோக்கமே அதப் பார்த்து அரசு அதிகாரிகள் யாராச்சும் அந்த கொத்தடிமைகளை மீட்கணும்ங்கிறதுதான். செய்தி வெளியாகுறதுக்கு முன்னாடியே அது நடந்துடுச்சுன்னா சந்தோஷம்தானே! ''

"அப்ப அந்த ஆளை...?''

'' தப்பு செஞ்சவர்தான். ஆனா தப்பை உணர்ந்து திருந்திட்டார்ல. அதனால அவரப்பத்தி எழுத வேணாம்ங்கிறார் எம்.டி. ஆனா அந்த ஆள் சொன்னமாதிரி அத்தனை பேருக்கும் பத்திரங்களையெல்லாம் திருப்பிக் கொடுத்து அவங்களை விடுவிக்கிறாரான்னு கூட இருந்து உறுதி செஞ்சுக்கங்க. உங்களால இருபத்திநாலு அப்பாவிகளுக்கு நல்லது நடக்கப் போகுது... கங்ராட்ஸ்!''

சந்தோஷப் பெருமையோடு போனை வைத்தேன். தான் செய்த தவறை உணர்ந்துகொண்டு யாரரவது ''ஸாரி'' சொன்னால் மன்னிக்கும் மனப்பக்குவம் கொஞ்சமேனும் எனக்கு வந்தது அதற்குப் பிறகுதான்!

நன்றி: ஜி.கவுதம், சென்னை. 

Saturday 1 June 2013

மனித உறவுகள் மேம்பட.....


1. தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். (Ego)

2. அர்த்தமில்லாமிலும்,தேவையில்லாமிலும் பின் விளைவு அறியாமலும் பேசுக் கொண்டேயிருப்பதை விடுங்கள். (Loose Talks)

3. எந்த விசயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள். (Diplomacy)

4. விட்டுக் கொடுங்கள். (Compromise)

5. சில நேரங்களில் சில சங்கடங்களைச்  சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (Tolerate)

6. நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள். (Adamant Arguments)

7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness)

8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying Tales)

9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள். (Superiority Complex)

10. அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)

11. எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிகொண்டிருக்காதீர்கள்.

12. கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

13. அற்ப விசயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.

14. உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். (Flexibility)

15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (Missunderstanding)

16. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)

17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும்கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.

18.பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.

19. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள். (Frankness)

20. பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். (Initiative)

21. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்.

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

நன்றி: கலைமகள் செல்வகுமார்

Thursday 16 May 2013

'நவரசக் கலைமணி'யை வாழ்த்துகிறோம்!

உலக மகளிர் நல அமைப்பு  சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக அரங்கில்
21-04-2013 அன்று நடத்திய ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கின் போது
சமூக சேவை ,ஆவணப்பட இயக்கம், பாரத நாட்டியம், ஓவியம், இசை உட்பட பல துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.



இந்த விழாவில் தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் சேலம் புகைப்படக்  கலைஞர் திரு ஏ .எம் .சுதாகரின் திறமையைப் பாராட்டி " நவரசக் கலைமணி " என்ற விருது வழங்கப்பட்டது.


விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இந்திரா கல்வி நிறுவனங்களின் குழுமத்  தலைவர் திரு.வி .ஜி.ராஜேந்திரன் விருதினை திரு ஏ .எம் .சுதாகருக்கு வழங்கினார்.


சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் சார்பில்
நாமும் அவரைப் பாராட்டி வாழ்த்துகிறோம்!

 

Saturday 11 May 2013

மணிப்பூரில் ஒரு சகாயம்!

நாம் கற்ற கல்வியால் இந்த மானுடத்திற்கு பயன் இருக்குமேயானால் அதுதான் சரியான கல்வி. ஆனால் இங்கு பெரும்பாலும் நம் வயித்துபாட்டுக்காகவே படிக்கிறோம். அதுபோல ஒருவர் ஒருபதவியில் இருக்கிறார் என்றால் அந்த பதவியினால் அந்த சமூகத்திற்கும்,எளிய மனிதர்களுக்கும் பயன் இருக்குமேயானால் அப்பொழுதுதான் அந்தப்பதவிக்கும்,அப்பதவில் இருப்பவர்க்கும் பெருமை. ஆனால் இன்று பெரும்பாலான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தன் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசியல்வாதிகளின் முதுகைச் சொறிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியிலும் ஒரு சிலர் மக்கள் நலனுக்காக உழைப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எத்தனையோ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள், ஆனால் நம் நினைவிற்கு வருபவர்கள் சகாயம், இறையன்பு, அன்சுல் மிஸ்ரா என்று ஒருசிலரே. காரணம், இவர்கள் அந்தப் பதவியில் அமர்ந்தப்பிறகு அவர்கள் மக்களுக்காகச் செய்த சேவைதான் அவர்களை நம் நினைவில் நிற்கச்செய்கின்றது.

RBI(Reserve Bank of India)யின் துணைகவர்னர் திரு.சக்கரவர்த்தி அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னால் சொன்ன ஒரு கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். அதாவது பெரிய பதவிகளுக்கெல்லாம் பெரும்பாலும் அடித்தட்டிலிருந்து படித்துவிட்டு வருபவர்களை அமர்த்த வேண்டும், அப்பொழுதுதான் அவர்களின் பிரச்சனைக்கு ஏற்ப அவர்களால் திட்டங்களை வகுக்க முடியும் என்றார். இதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். இவரின் கூற்றுக்கு உதாரணங்கள்தான் இறையன்பு,சகாயம் போன்றவர்கள். இவர்கள் வரிசையில் இன்னும் இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்திய ஓர் உதாரணம் திரு. ஆர்ம்ஸ்ட்ராங் பாமே, இ.ஆ.ப. Armstrong Pame I.A.S.(28). இவர் ஏழு சகோதரிகள் (Seven Sisters) என்று வருணிக்ககப் படக் கூடிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தின், தௌசெம் (Tousem) பகுதியில் Sub-divisional magistrate பதவியில் இருக்கும் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அதோடுமில்லாமல் நாகலாந்து மாநிலத்தின் Zeme என்னும் மலைவாழ் இனத்திலிருந்து வந்திருக்கும் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியும்கூட.


நமது  அரசாங்கம் செய்திருக்க   வேண்டிய செயலை    தனிமனிதனாக  (மக்கள் ஒத்துழைப்புடன்)சாதித்திருக்கிறார்.   இவரை  அந்தப்   பகுதி மக்கள் ’அதிய மனிதன்’ என்று  தலையில் தூக்கி  வைத்து  கொண்டாடுகிறார்கள்.   அப்படி என்னதான் சாதித்துவிட்டார் இவர் என்று கேட்கிறீர்களா?  ஆம், மக்களுக்கு நல்ல   சாலை   வசதியை   ஏற்படுத்திக்    கொடுத்திருக்கிறார்.    இவர்   அந்த திட்டத்திற்கு’’மக்கள் பாதை’’(People's Road) என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்.


அட!? ரோடுபோட்டதுலாம் ஒரு சாதனையா? எங்க ஊர் பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர்கூடதான் எங்களுக்கு ரோடுபோட்டுகொடுத்திருக்கிறார்கள் என்று அங்கலாய்க்காதீர்கள். நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் போடுவது மக்களுக்காக அல்ல, தங்களின் வசதிவாய்ப்பை பெருக்கிக்கொள்வதற்காக. ஆனால் ஆர்ம்ஸ்ட்ராங் பாமே செய்துகொடுத்திருக்கும் சாலைவசதி மலைவாழ் மக்களுக்காக.அதுவும் மிகமிகக் கடினமான மலைப்பகுதியில்.

2012ஆம் ஆண்டு Tousem மாவட்டத்தின் Sub-divisional magistrate பதவிக்கு வந்தபிறகு பல கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அம்மக்களின் வாழ்க்கை முறையினைப் பார்த்திருக்கிறார். அம்மக்கள் அரிசி வாங்கி முதுகில் சுமந்துகொண்டு பலகிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழல், ஒரு நோயாளியை மருத்துவமணைக்கு அழைத்துச்செல்ல வேண்டுமானால்கூட மூங்கிலாலான ஒரு தட்டியில்தான் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும். 


இது போன்ற மிகக் கடுமையான சூழ்நிலையை பார்த்த அவர் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்பகுதி மக்கள் ஒரே குரலாக எங்களுக்கு நல்ல சாலைவசதி வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். சரி என்று இந்த விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். 

அரசோ அங்கு சாலைபோடுவதற்கான சூழ்நிலை துளிகூட இல்லையென்று கூறி சாலைபோட மறுத்துவிட்டது. இருந்தும் இவர் சோர்ந்து போய்விடவில்லை. தனது சொந்த பணம் ஐந்து லட்சத்தை முதல்முதலாக இந்த திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கிறார். அவரது சகோதரர்(டெல்லி பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) ரூபாய் ஒருலட்சமும், அவரது அம்மா (இவரின் அப்பா ஓய்வூதியத்திலிருந்து) ஐயாயிரமும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தத் தகவலை அப்படியே அவருடைய முக நூலில் போட்டிருக்கிறார். இதைப்பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்து ஒருவர் 2500 டாலரும், மற்றொருவர்3000டாலரும் கொடுத்திருக்கிறார்கள். இப்படியாக 40லட்சம் சேர்ந்திருக்கிறது. இருந்தும் இந்த 40லட்சம் மிகச் சிறிய தொகையாகவே இருந்திருக்கிறது. சாலைபோடும் உள்ளூர் Contractors சில இயந்திரங்களை இலவசமாக கொடுத்து உதவியிருக்கிறார்கள். அந்தப் பகுதி மக்களும் கூலிவாங்காமல் வேலைசெய்திருக்கிறார்கள். இப்படியாக அந்தப் பகுதி மக்களுக்கு 100கிலோமீட்டர் அளவுக்கு சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

 


’உண்மையில் இதை என்னால் நம்பவே முடியவில்லை,   இது  ஒரு அதிசயம், மீண்டும்      என்னால்     இப்படி     ஒரு     செயலைச்    செய்ய   முடியுமா   என்று தெரியவில்லை’ என்று நெகிழ்கிறார் திரு. ஆர்ம்ஸ்ட்ராங் பாமே.

அந்தப் பகுதி விவசாயிகளும் இந்த ’மக்கள் சாலை’ வந்தபிறகு எங்களாலும் நாலு காசு சம்பாதிக்கமுடிகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

’ரோடு   போட்டது   போதும்   முதலில்   உனக்குன்னு   ஒரு   வீடு  கட்டு’ என்று இவரின் அம்மா கூறுகிறாராம்...

நான் எத்தனைமுறை வேண்டுமானாலும் உரக்கச் சொல்வேன் மகத்தான சாதனைகளும், மக்களுக்கான பயனுள்ள திட்டங்களும் இதுபோன்ற எளிய மனிதர்களாலேயே சாத்தியமாகின்றன.

நன்றி: 'தமிழ்க் குடில்' பூரணி எமிலி

Saturday 4 May 2013

உலக ஊடக சுதந்திர தினம்........


  மே மாதம் பதினைந்தாம் நாள் உலக ஊடக சுதந்திர நாளாக (World Press Freedom Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஊடக சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாக ‘உலக ஊடக சுதந்திர நாள்’  பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாள் பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "ஊடக சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.

ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டு தோறும்  யுனெஸ்கோ நிறுவனத்தினர்  யுனெஸ்கோ/ கில்லெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது  வழங்கிக் கௌரவிக்கின்றனர்.

இவ் விருது 1986 டிசம்பர்17 இல் கொல்லப்பட்ட  கொலம்பியப் பத்திரிகையாளர் "கில்லெர்மோ இசாசா" (Guillermo Cano Isaza) என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மே மூன்றாம் நாள் நமது  சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தினரால்  சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள செய்தியாளர் அரங்கத்தில் 'உலக ஊடக சுதந்திர தினம்' சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
    
நம்முடைய சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் மட்டுமே  போற்றுதலுக்குரிய உலக ஊடக சுதந்திர நாளினை நினைவு கூறும் வகையில் அகில இந்தியாவிலேயே கொண்டாடிய ஒரே பத்திரிகையாளர் அமைப்பு என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.

சிறப்பு வாய்ந்த இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.மகரபூஷணம் தலைமை உரையினை நிகழ்த்தினார். சேலம் பெரியார் பல்கலைக் கழக ஊடகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் திரு. சுப்ரமணியம்,திரு. தமிழ்ப் பரிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையினைச் சேர்ந்த எழுத்தாளர் திரு. ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை நிகழ்த்தினார். ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றிய அரிய தகவல்களை அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
உலக ஊடக சுதந்திர தின விழாவிலிருந்து சில படங்கள்....
செய்தியாளர் அரங்கிற்கு வரும் ஆட்சியர்...



பி.ஆர்.ஓ  திரு. பழனிசாமி அவர்களின் அறிமுக உரை....


வரவேற்புரை ..... திரு. சிவசுப்ரமணியன் 


தொகுப்புரை... திரு. மோகன் 


வாழ்த்துரை... திரு. தமிழ்ப் பரிதி, 
உதவிப் பேராசிரியர். பெரியார் பல்கலைக் கழகம் 



திரு. சுப்ரமணியம் , 
உதவிப் பேராசிரியர். பெரியார் பல்கலைக் கழகம்





தலைமையுரை.... 
சேலம் ஆட்சியர் திரு. மகரபூஷணம் 


சிறப்புரை..... திரு.ஸ்டாலின் குணசேகரன் 




பார்வையாளர்கள்....



நினைவுப் பரிசளிப்பு....






நன்றியுரை.... திரு. கதிரவன் 


உலக ஊடக சுதந்திர தின விழா முடிவில் 
சிறப்பு அழைப்பாளருடன் சேலம் செய்தியாளர்கள்...


சிறப்புற நடைபெற்ற இந்த விழா ஏற்பாடுகளில் சேலம் பெரியார் பல்கலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டது கூடுதல் சிறப்பு.

அடுத்த ஆண்டில் இந்த தினத்தை இதை விடவும் சிறப்பாக நடத்திட உறுதி பூண்டனர் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தினர்.