Pages

Saturday 31 December 2011

அரசு ஆணையினை மதிக்காத சேலம் பி.ஆர்.ஓ. பழனிசாமி!

அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பதாகத் தன்னை கருதிக் கொண்டு நிழல் ஆட்சியராகச்  செயல்பட்டு வரும் சேலம் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பழனிசாமி, சேலம் செய்தியாளர்களுக்கான உரிமைகளை முற்றிலுமாக மறுத்து தொடர்ந்துஅவர்களைக் கேவலப்படுத்தி வரும் அவலம் குறித்து நமதுமுந்தைய பதிவுகளில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

'துரோகிகள்' என்று குறிப்பிட்டு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களால் தன்னுடைய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சில நபர்களின் தயவு மற்றும் ஆசி தனக்கு இருந்த காரணத்தால் மாவட்ட ஆட்சித் தலைவவரைக் கூட மதிக்காதவராகவே இருந்தார் என்று அவரை நன்கறிந்த சேலம் அரசியல் பிரமுகர்கள் பி.ஆர்.ஓ. பழனிசாமி பற்றி வெளிப்படையாகவே விமர்சித்தனர்.


பிற மாவட்டங்களில் மரியாதைக்குரியவர்களாக மதிக்கப்படும் செய்தியாளர்கள் சேலத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி திரு.பழனிசாமியால் மட்டம் தட்டப்பட்டு மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர். 2011ஆம் ஆண்டுக்கான செய்தியாளர்கள் அடையாள அட்டையும், புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கென அறை ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து தந்திருக்க வேண்டிய பி.ஆர்.ஓ. பழனிசாமி அவற்றைச் செய்யவே இல்லை.

தனது ஏ.சி. அறையில் சொகுசாக அமர்ந்து செய்தியாளர்களைப் பிரித்தாளும் தந்திரங்களை வன்மத்துடன் மேற்கொண்டார். கடந்த காலங்களில் இவரது ஒழுங்கீனங்களைப் பற்றி சில பருவ இதழ்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருந்ததே அந்த இதழ்களின் செய்தியாளர்கள் மீது அவர் வன்மம் கொள்ளக் காரணம்.

சேலம் செய்தியாளர்கள் இரு அமைப்புகளின் கீழ் செயல்பட்டுக் கொண்டு இருந்தாலும் ஒற்றுமையுடன் இருந்தனர். இந்த ஒற்றுமையை உடைத்தால்தான் தன்னுடைய செல்வாக்கினை நிலை நாட்டிக் கொள்ள முடியும் என்று பி.ஆர்.ஓ. பழனிசாமி அதற்கான வேலைகளில் திட்டமிட்டு இறங்கினார். இரு அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் பரஸ்பரம் தூண்டி விட்டு அவர்களுக்குள் புகைச்சலை ஏற்படுத்த பழனிசாமி மேற்கொண்ட  முயற்சி செய்தியாளர்கள் மத்தியில் எடுபடவில்லை.

செய்தியாளர்களுக்கு அனுசரனையாகவும் ஆதரவாகவும் நடந்து அவர்களுடன் நட்பு பாராட்டி வந்த ஏ .பி.ஆர்.ஓ. திரு.கோவலனை செய்தியாளர்களுடன் விரோதப் போக்கை மேற்கொள்கிறார் என்று பி.ஆர்.ஓ. பழனிசாமி தனது துறை இயக்குநருக்குப் புகாரும் அனுப்பி இருந்தார் என்பது தான் வேடிக்கை! 

தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக செய்தியாளர்களுக்கு என தனி அறையினையும், அடையாள அட்டையினையும் தர வேண்டிய கட்டாயத்துக்கு பி.ஓர்.ஓ. பழனிசாமி தள்ளப்பட்டார். இந்த போராட்டங்களை முன்னின்று செய்த காரணத்தால் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் வாரமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களை மட்டம் தட்டும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டையினை தர மறுத்து விட்டார் பி.ஆர்.ஓ. பழனிசாமி !

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பருவ இதழ்களின் செய்தியாளர்களுக்கு அடையாள அட்டையை சேலத்தில் இதற்கு முன்பாக இருந்த மாவட்ட ஆட்சியர்களும், பி.ஆர்.ஓ.க்களும் வழங்கி இருந்தனர். அவற்றைக் குறிப்பிட்டு சலுகைகளுக்காக அடையாள அட்டையைக் கேட்கவில்லை, செய்தியாளர்களுக்கான அடையாள அறிமுகமாகவே அதைக் கேட்பதாகக் கூறப்பட்டதை அவர் ஏற்கவில்லை. பிற மாவட்டங்களில் இதுபோன்ற அடையாள அட்டை வழங்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் செய்தியாளர்கள் எடுத்து உரைத்தும் அதனை பி.ஆர்.ஓ. ஏற்கவில்லை.

"மற்ற மாவட்டங்களில் அடையாள அட்டையினைப் பருவ இதழ் செய்தியாளர்களுக்கு வழங்கி இருப்பது தப்பு. மத்த மாவட்டங்களில தப்பு பண்ணினாங்க அப்படிங்கரதுக்காக நானும் தப்பு பண்ண மாட்டேன். இதுக்கு முன்னால சேலத்தில இருந்தவங்க விபரம் தெரியாமப் பண்ணிட்டாங்க. எனக்கு விபரம் தெரியும். சோ... உங்களுக்கு ஐ.டி. கார்டை நான் தர மாட்டேன் " என்றார் ஆணவத்தின் உச்சத்தில் இருந்த பி.ஆர்.ஓ. பழனிசாமி !

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சென்னையில் நடந்த பி.ஆர்.ஓ.க்களின் கூட்டத்தில் செய்தித்துறை இயக்குனர் பருவ இதழ்களின் செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை தரப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறி இருந்தார்.  ஆனால் அதனை ஏற்கும் நிலையில் சேலம் பி.ஆர்.ஓ. பழனிசாமி இல்லை. 

சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் வாரமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களை மட்டம் தட்டும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டையினைத் தர  மறுத்து வினோதமான ஒரு காரணத்தைச் சொல்லி அதை எழுத்துப் பூர்வமாகவும் கையெழுத்திட்டு அசட்டுத் துணிச்சலுடன் அதனைத் தந்தார் பி.ஆர்.ஓ. பழனிசாமி...!


ஆனால்...

செய்தி மற்றும் சுற்றுலாத் (செய்தி வெளியீடு) துறையின் சார்பில் 3.12.1996 தேதியன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையோ (நிலை) எண்.210 பருவ இதழ் செய்தியாளர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கலாம் என்று கூறி உத்தரவிட்டுள்ளது.

காண்க: http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/inftour/tour210-t.htm



இப்படி ஒரு அரசு ஆணை இருப்பது கூட தெரியாத ஒரு நபர் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பி.ஆர்.ஓ.வாக இருக்கிறார் என்பது வெட்கக் கேடு! 

அந்த ஆணையின் விபரங்கள் வருமாறு....

1. அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று செய்தி சேகரிப்பதற்கு ஏதுவாக, செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குமாறு, பருவ இதழ்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

2. மேற்படி கோரிக்கையை, அரசு உரிய பரிசீலனைக்குப் பின்னர் பருவ இதழ்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள்/புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நிகழ்ச்சிகளில் செய்திகள் சேகரிப்பதற்கு ஏதுவாக, செய்தியாளர் அட்டை (Press Pass) வழங்குவதென ஆணையிடப்படுகிறது.

3. செய்தியாளர் அட்டை பின்வரும் விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படும். 

பருவ இதழ்கள் விற்பனை பிரதிகளின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 10,000 ஆக இருத்தல் வேண்டும். 

செய்தியாளர்கள்/புகைப்படக்காரர்கள்/ஒளிப்பதிவாளர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். 

பருவ இதழ்களிலும், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிலும் நிரந்தர ஊழியராக இருத்தல் வேண்டும். 

ஒவ்வொரு பருவ இதழுக்கும் முறையே 2 செய்தியாளர்கள் மற்றும் ஒரு புகைப்படக்காரர் ஆக மொத்தம் மூவருக்கு மட்டும் வழங்கப்படும். 

ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் முறையே 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள், 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள், ஆக மொத்தம் ஆறு நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

புதிய பருவ இதழ்கள் 6 மாத காலம் தொடர்ந்து வந்த பின்னரே செய்தியாளர் அட்டை வழங்கப்படும். 

4. செய்தியாளர் அட்டை வழங்குவது சம்பந்தமான ஆலோசனைகள் வழங்குவதற்கென, இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தலைமையிலான ஏழு நபர்கள் கொண்ட 'செய்தியாளர் அட்டை பரிந்துரைக்குழு' ஒன்று அமைக்கப்படும். இக்குழுவின் உறுப்பினர் செயலராக இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) இருப்பார். பிற ஐந்து உறுப்பினர்களையும் அரசு நியமிக்கும்.

5. செய்தியாளர் பரிந்துரைக் குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். இக்குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி செய்தியாளர் அட்டை விண்ணப்பங்களை பரிசீலித்து, விவாதித்து, செய்தி மக்கள் தொடர்பு இயக்குநருக்கு அளிக்கும் பரிந்துரையையொட்டி, இயக்குநர், செய்தியாளர் அட்டையை வழங்க அதிகாரமளித்து ஆணையிடப்படுகிறது.

6. 1990-1998 ஆம் ஆண்டிற்கான செய்தியாளர் அட்டை பரிசீலனைக் குழுவிற்கு  உறுப்பினர்களை நியமித்து ஆணையிடப்படுகிறது. 

இவ்வளவு தெளிவான ஒரு அரசு ஆணையை இருட்டடிப்பு செய்து அடையாள அட்டையினை மறுத்து சேலம் மாவட்டச் செய்தியாளர்களையும், மாவட்ட ஆட்சித் தலைவரையும் ஒரு சேர  முட்டாள்களாக்க முயற்சி செய்யும் அதிமேதாவி பி.ஆர்.ஓ. பழனிசாமியின் பார்வைக்காக அந்த அரசு ஆணையினையும் இங்கு வெளியிட்டுள்ளோம். 

இதன் பிறகாவது குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்ததைப் போல அல்லாமல் அரசு ஆணையினைத் தெளிவாகப் புரிந்து கொண்டு பருவ இதழ் செய்தியாளர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கி அரசு ஆணையினை சேலம் பி.ஆர்.ஓ. பழனிசாமி மதிப்பார் என நம்புகிறோம்.

போலி ரேஷன் கார்டுகளை தடுக்க மின்னணு ரேஷன் கார்டு....

சென்னை, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக மின்னணு குடும்ப அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், அடுத்த ஆண்டு டிசம்பர் வரை பழைய கார்டு மூலமே ரேஷனில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் தற்போது 1.90 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள், 2005 -ம் ஆண்டு வழங்கப்பட்டது. அவை 2009 -ம் ஆண்டுடன் முடிந்து விட்டன. அப்போது போலி ரேஷன் கார்டுகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வந்ததால், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. இதனால், பழைய கார்டிலேயே 2010 -ம் ஆண்டுக்கு உள்தாள் இணைப்பு வழங்கப்பட்டு ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. 2011 -ம் ஆண்டிலும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாமல் உள்தாள் வழங்கி மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டு பயன்படுத்தப்பட்டதால் முகவரி மாற்றம், பெயர் நீக்கல், சேர்த்தல் என பல பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பழைய ரேஷன் கார்டை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. 2012 -ம் ஆண்டில் புதிய ரேஷன் கார்டு வினியோகிக்கப்படும் என கூறப்பட்டது. இதை காரணம் காட்டி, பல மாதங்களாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கார்டு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், 3 -வது முறையாக பழைய ரேஷன் கார்டை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 2012 -ம் ஆண்டுக்கு உள்தாள் இணைப்பு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொது வினியோக திட்டத்தின்கீழ் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் 2011 டிசம்பர் 31 அன்று முடிவடைகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குடும்ப அட்டையில் தன் பெயரை பதிவு செய்திருந்தால் அதை கண்டுபிடிக்க வழி இல்லை. இதன் காரணமாக ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் ஒரே நபரின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையும், போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்ற நிலையும் உள்ளது.
இத்தகைய குறைபாடுகளை களைய, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின்கீழ் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்து பிரத்யேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தி மின்னணு குடும்ப அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொகுப்பு முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால் ஒரே நபர் பல குடும்ப அட்டைகளில் பெயரை பதிவு செய்வதும், போலி குடும்ப அட்டைகளும், நியாய விலைக்கடைகளில் போலி பட்டியல் இடப்படுவதும் களையப்படும்.

புதிதாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு சில காலம் ஆகும். எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு காலத்துக்கு அதாவது 2012 டிசம்பர் 31 வரைநீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியின் தகிடுதத்தங்கள்.... மக்களே உஷார்!

ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் செய்த ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ இரண்டு மாதத்திற்கு முன் தான் சிறைக்குச் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி.....


பிரபல தமிழ் நடிகர் சூர்யா பங்கு பெறும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"  என்னும் விஜய் டீவி நிகழ்ச்சியின் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான்.


முதலில் இவர்கள் கேட்கும் கேணத்தனமான கேள்விகளுக்கு பதிலை நீங்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்ப வேண்டும். 


தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்முதல் சொல் 
A. நீராரும் B.சீராரும் C.காராரும் D.போராரும் என்பதைப் போன்ற அறிவு விருத்திக்கான கேள்விகள் கேட்கப் படுகின்றன.


இதற்கு பதிலை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பும்போது அதற்குக் கட்டணமாக ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களைத் தொடர்புகொள்ள சில ஸ்பெஷல் நம்பர்கள் உள்ளன. இதில் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேச ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது....




இந்தக் குறுஞ்செய்தி மற்றும் டெலிபோன் கால் மூலமாக மட்டும் இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை சம்பாதிகின்றனர். அதாவது பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம். வீட்டில் மட்டும் இருந்துதான் போன் செய்யவேண்டுமாம். 


அப்போது தானே உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளைக்கான கட்டணம் தானாகவே பில்லில் கூடி விடும்.


 இது லாட்டரி பிஸினஸை விட மிகப் பெரிய கொள்ளை!


ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம்! மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மேல் வருமானம்!!


இதற்காக வக்காலத்து வாங்கும் தமிழ் நடிகருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் என்பதால் நம் மக்கள் இப்படி கொள்ளை அடிக்கப்படுவதில் அவருக்கென்ன கவலை?


தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிர் வருமென சொல்லி முதலில் மிளகாய் அரைத்தாகி விட்டது. இப்போது இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஷல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை!


இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை....
அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்!


இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) படியுங்கள் (www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசைக்  கரியாக்கியேத் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது".


உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்கு இந்த ஸ்பெஷல் நம்பர்? டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுத்திருக்க வேண்டும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்....


தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனைப்  பூட்டி வையுங்கள். குழந்தைகளிடம் போன் செய்ய வேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்கள்.


மொபைல்களைத் தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்....


தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு மக்களுக்கு உண்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்.


உண்மைகளை அம்பலப்படுத்தும் 
மிமிக்ரி வடிவிலான ஒரு காணொளி...




நன்றி: நாகராஜன் ரவி

Thursday 29 December 2011

சேலம் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி!

சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றம் நீண்ட காலமாகத் தொடர்ந்து  போராடியதன் விளைவாக சேலம் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  செய்தியாளர்களுக்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட அந்த இடம்  செய்தியாளர்  அலுவலகமாகவும். செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்ற வகையில் கூட்ட அரங்கமாகவும் ஒருசேர, முக்கியக் கொடையாளர் ஒருவரின் பொருளுதவி கொண்டு தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் களுக்கான புதிய அறையை ஒட்டி உள்ள காலியான நிலப்பரப்பிலும் மரக்கன்றுகளை நட்டு பசுமை காக்கும் முற்சியில் தங்களுக்குள்ள ஆர்வத்தை சேலம் பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.  







இந்த நிகழ்வில் சேலம் உதவி செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரியான திரு.கோவலன் அவர்கள் பங்கேற்று சேலம் பத்திரிகையாளர்களின் இந்தப் பொதுநல ஆர்வத்தை ஊக்குவித்தார். 



பசுமை காக்கும் முயற்சியில் பத்திரிகையாளர்கள்!

பசுமை காக்கும் முயற்சியில் சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதற்காக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

சுற்றுச் சூழல் காக்கும் தங்களின் இந்த முயற்சிகளுக்கு பொதுநல அமைப்புகளையும் உடன் சேர்த்துக் கொண்டு,   இலவசமாக மரக்கன்றுகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தந்து மாணவர்களிடையே மரக்கன்று நடுவதை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அதன் துணைவேந்தர் திரு முத்துச் செழியன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நற்பணி தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றத்தினரால் செய்யப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு நிகழ்வாக கடந்த டிசம்பர் 29ந் தேதி  சேலம் மாவட்டம் குப்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும்விழாவினை சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றம் தன்னுடன் நுகர்வோர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினைச் சேர்த்துக்கொண்டு நடத்தியது.

நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் அவர்களது ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் மகிழ்வுடன் பங்கேற்றனர். மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் மரக்கன்று நாடும விழாவில் நடத்தப்பட்டது.

குப்பனூர் பள்ளியில் நடந்த மரக்கன்று நடும் விழாவின் புகைப்படத் தொகுப்பு இதோ....
































Wednesday 28 December 2011

மயங்க வைக்கும் வடிவங்களில், புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கைக்கடிகாரங்கள்....

நம் கைகளில் கட்டியிருக்கும் கைக்கடிகாரங்கள் அருதப் பழசானவை என்று அவற்றை நாம் ஓரங்கட்டிவைக்கும் காலம் வெகு விரைவில் இல்லை என்பதை இங்குள்ள படங்கள் உங்களுக்கு உணர்த்தப் போகின்றன...

எத்தனை வடிவங்கள்! எத்தனை வண்ணங்கள்!! என்று வாயைப் பிளக்க வைப்பனவாக உருவாக்கப்பட்டிருக்கும் இவை அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியவை.

நோக்கியா, சாம்சுங், சோனி எரிக்சன் போன்ற பிரபல செல்போன் நிறுவனங்களும் இந்தப் போட்டியில் களம் இறங்கி வாட்ச் வடிவத்தில் செல்போன்களை வடிவமைத்துள்ளன.

இங்குள்ள படங்களில் உள்ள வாட்சுகளைப் பார்த்து அந்த எட்டாக் கனிகளுக்காக நீங்களும் சற்று ஏக்கப் பெருமூச்சு விடுங்களேன்...!