Pages

Thursday 15 December 2011

தேசிய அங்கீகாரம் பெற்ற சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு!


கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னையைத் தவிர்க்கும் விதத்தில் புதிய கருவி ஒன்றினை , சென்னையைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்களின் கண்டுபிடித்துள்ளனர். மாணவர்களின் இந்தக் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.


கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது. இதைத் தவிர்க்க, சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையைச்  சுட்டிக் காட்டும்' கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இக் கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது.

முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது.

ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.

இக் கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.

இது குறித்து, விருது பெற்ற மாணவர்கள், "பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பைப்  பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசிது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை தமிழ்நாட்டில் யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது" என்றனர்.

1 comment: