Pages

Thursday 29 March 2012

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!! என்றெல்லாம் அரசு அலுவலகங்களில் நியான் போர்டுகள் வைத்தாலே போதும், தமிழ் தானாக வளரும் என்பதாகவே அரசு அதிகாரிகளின் எண்ணம் இருக்கிறது.

ஆங்கிலத்தில் எழுதும் போது இம்மி இடறினாலும் கொலைக் குற்றம் புரிந்ததைப் போல பதறும் இந்த அதிகாரிகளின் பார்வையில் தமிழ் எவ்வளவு அசிங்கப்படுத்தப் பட்டாலும் கவலை இல்லை என்பதே இன்றைய நிலை.

A Apple என்று எழுதினால் வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் குதித்து An apple  என்று அதனை மாற்றி எழுத வைக்கும் இவர்களால் தமிழ் எப்படியெல்லாம் சின்னா பின்னம் ஆக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போமா....

சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலரால் அண்மையில்  அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ள ஒரு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள படத்துக்கான அடிக்குறிப்பைச் சற்று கவனமாகப் படித்துப் பாருங்கள்....


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனம் திருந்திய மதுவிலக்குக் குற்றவாளிகள் 13 நபர்களுக்கு தலா ரூ. 30.000 வீதம் ரூ.90,000க்கான காசோலையினை ஆட்சித் தலைவர் திரு.க.மகரபூஷணம் இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார் என்று அந்த அடிக்குறிப்பில் காணப்படுகிறது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனம் திருந்திய மதுவிலக்குக் குற்றவாளிகள் 13 நபர்களுக்கு.... என்று குறிப்பிட்டுள்ளது ஏதோ அங்கு வேலை பார்த்த 13 மதுவிலக்குக் குற்றவாளிகள் மனம்  திருந்தினார்கள் என்பது போன்ற மயக்கமான பொருளையல்லவா தருகிறது?

மனம் திருந்திய மதுவிலக்குக் குற்றவாளிகள் 13 நபர்களுக்கு தலா ரூ. 30.000 வீதம் ரூ.90,000க்கான காசோலையினை ஆட்சித் தலைவர் திரு.க.மகரபூஷணம் இ.ஆ.ப. அவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார் என்று குறிப்பிட்டு இருந்தால் அது சரியாக இருந்து இருக்கும். அதன் பொருளும் குழப்பமில்லாமல் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கும்.

மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் செய்தியில் சற்று கவனத்தைக் காட்டி இருக்க வேண்டும் சேலம் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள்...


No comments:

Post a Comment