Pages

Wednesday 29 June 2011

சேலம் மாவட்ட நிர்வாகத்துக்கு ஊடகவியலாளர்களின் கண்டனம்....


சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பெறும் அரசுத் துறை சார்ந்த கூட்டங்களுக்குப் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதும், ஊடகங்கள் சார்பில் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டு செய்தி சேகரித்து பொதுமக்களுக்கு அந்த கூட்டம் தொடர்பான செய்திகளை அறியச் செய்வதும் வழக்கம்.

ஆனால், கடந்த சில நாள்களாக சேலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு முந்தைய நாளில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டாலும் மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று செய்தி சேகரிக்க செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்கும் செய்தியாளர்கள் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுவிடுவார்களோ, அரசுக்கு இது தெரிய வந்தால் தங்களுக்கு பாதிப்பு நேர்ந்து விடுமோ என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் இது போன்ற நடவடிக்கையை எடுத்து வருவதாகத் தெரிகிறது.

கூட்டம் முடிவடைந்த பிறகு அந்த கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில், முழுவதும் அரசுக்கு சாதகமாகவும், மாவட்ட நிர்வாகத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் கூறுகள் மட்டுமே பத்திரிகைச் செய்தியாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மூலம் பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.   

கடந்த ஜூன் 29ந்  தேதி  புதன்கிழமை காலை சேலம் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம், மகளிர், குழந்தை கடத்தல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் ஆகியவற்றில் செய்தி சேகரிக்க வருமாறு மக்கள் தொடர்பு அலுவலரால் தாங்கள் எஸ்.எம்.எஸ்  மூலம் அழைக்கப்பட்டதால் அங்கு சென்ற செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு அனுமதி சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.மகரபூஷனத்தால் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.மகரபூஷனம்

அழைப்பு வந்ததால் தான் வந்துள்ளோம்  என்று கூறி கூட்ட அரங்கிற்கு செல்ல முயன்ற பத்திரிகையாளர்கள் ஆட்சியர் அலுவலக ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

‘உங்களுக்கு ஆட்சியரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் தலைமையில் நடைபெறும் எந்த கூட்டத்துக்கும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு அனுமதி இல்லை’ என்று ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்  தெரிவித்து உள்ளனர். எஸ்.எம்.எஸ்  தந்து செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களை வரவழத்த மக்கள் தொடர்பு அலுவலர் திரு.லிங்கம் இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டார்.

பொதுமக்களின் நலன் சம்பந்தப்பட்ட சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில், கடந்த காலங்களில் இருந்த ஆட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்களின் தரப்பில் இருந்தும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளைப் பெற்று வந்தனர். ஆனால், இப்போதோ மக்கள் பிரச்னை தொடர்பான கூட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதையே தடுத்து மிகப் பெரிய இடைவெளியை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர்.

நேர்மையான நல்லதொரு நிவாகம் தன்னால் தரப்பட வேண்டும் என்ற உறுதிப் பாட்டுடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கு இது போன்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் இடையூறாகவே அமையும்.

இது போன்ற மோசமான ஒரு நிகழ்வு இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லை. தாங்கள் அவமதிக்கப்பட்டது மோசமான ஒரு நிகழ்வு என்றே  ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.

ஜனநாயகத்துக்கு எதிரான இது போன்ற நிகழ்வுகளை, பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடும் அதிகாரிகளின் சர்வாதிகாரப்போக்கை சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இனி வரும் காலங்களில் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை  சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

**************************************************************************************

30-06-2011 தேதியிட்ட காலைக்கதிர் நாழிதழில் வெளியான செய்தி.

 **************************************************************************************

4 comments:

  1. மடியில் கனமில்லாதவர்களுக்கு வழியில் பயமில்லை. அரசு நிர்வாகத்திற்கு எவ்வளவோ பயம் இருக்கு வூழல் செய்யனும், அரசியல்வாதிக்கு தொண்டூழியம் செய்யனும் இதை எல்லாம் வெளிய தெரியாம செய்யனும் இப்படி ஏகப்பட்ட பயம் இருக்கு அதனால் தான் வுண்மைகளை வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களை கண்டு பயபடுகின்றனர் இதை கண்டிக்கும் விதமாக பத்திரிக்கையாளர்கள் அவர்களின் செய்திகளை புறக்கணிக்க வேண்டும்

    ReplyDelete
  2. அதுக்கு நமக்குள்ளே ஒற்றுமை வேண்டும். அடுத்தவருக்கு தானே வந்தது எனக்கு வரும்போது பார்த்து கொள்ளலாம் என்கிற மனோபாவம் களையப்பட வேண்டும். ஒற்றுமையே வலிமை.

    ReplyDelete
  3. இன்று ஒரு சம்பவமும் நிகழ்ந்தது:

    சங்ககிரியில் இன்று தொடர்வண்டி பாதையில் நடந்த விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தோரை குறித்து நிகழ்விடத்திற்கு நேரில் வந்த மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரபூர்வ தகவல் கேட்டபோது, தனக்கு சமந்தமில்லாததை போல விபத்தை நான் நேரில் பார்க்கவில்லை என்று கூறிவிட்டு சென்றார். என்ன சொல்வது இவருக்கு ஏன் தயக்கம்? கூச்ச சுபாவமா அல்லது அச்சமா என்று தெரியவில்லை

    ReplyDelete
  4. ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்தை பார்வையிட வந்த ஆட்சியர் மகரபூஷணம் ஏதோ சுற்றுலா நிகழ்வைப் பார்க்க வந்ததைப் போல மகிழ்ச்சியில் சிரித்து கொண்டிருக்கிறார். அடுத்தவர்கள் படும் துயரங்களை ஒரு சிறிய இரக்க கண்ணோட்டத்தில் பார்கக் தெரியாத ஆட்சியர். மக்களுக்கு நன்மை செய்வார் என்பதை சிறிதும் எதிர்பார்க்க முடியாது..

    விபத்தில் லாரி டமால், டிரைவர் பனால் கோஷ்டியைச் சேர்ந்தவராகத்தான் இருக்க முடியும்.

    ReplyDelete